புதுச்சேரி
null

கோடை விடுமுறையில் இயங்கிய புதுச்சேரி தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

Published On 2023-06-07 16:37 IST   |   Update On 2023-06-07 17:29:00 IST
  • வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வருகிற 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வருகிற 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுவை மரப்பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சில நாட்களாக சிறப்பு வகுப்புகள் நடப்பதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் வி.சி.சி. நாகராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோர், பள்ளி முதல்வரிடம் விசாரித்தனர். ஆனால் பள்ளி முதல்வர் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இணை இயக்குநர் சிவகாமி அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதை கண்டார். உடனே வகுப்பில் இருந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்ததில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி இயங்கி வருவது தெரியவந்தது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசின் உத்தரவை மீறி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க அந்த பள்ளிக்கு இணை இயக்குனர் சிவகாமி நோட்டீஸ் வழங்கினார்.

தனியார் பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News