போலீஸ்காரரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்: ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு
- பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் ரகுபதிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.
- சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இங்கு நேற்று இரவு ஆயுதபூஜை விழா நடைபெற்றது. அப்போது சில வடமாநில தொழிலாளர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய போலீஸ்காரர் ரகுபதி சென்று அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.
மேலும் இது பற்றி விசாரிக்க வந்த மேலும் 5 போலீசாரையும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.