உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 4-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2023-06-30 10:59 IST   |   Update On 2023-06-30 10:59:00 IST
  • குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சையது முஸ்தபா (40). இவரது ஒரே மகள் இபான் நசீரா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் தந்தை சையது முஸ்தபா மற்றும் மகள் இபான் நசீரா உள்ளிட்ட இருவரும் குர்பானி கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று விட்டு அன்னூர் சாலையின் வழியாக வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அன்னூர் சாலையில் டேங்குமேடு பகுதியில் இருந்து நேசனல் பள்ளி வழியாக கரட்டுமேடு செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த டிராக்டரை சையது முஸ்தபா முந்த முயன்றுள்ளார்.

அப்போது,திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்ததில் தந்தை மற்றும் மகள் இருவரும் சாலையில் விழுந்துள்ளனர்.

இதில் டிராக்டரின் பின்சக்கரத்தில் இபான் நசீரா சிக்கி கொண்ட நிலையில் அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.தந்தை சையது முஸ்தபா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News