உள்ளூர் செய்திகள்

சாத்தூர் அருகே கத்தியால் குத்தி வியாபாரி கொலை

Published On 2022-11-29 12:10 IST   |   Update On 2022-11-29 12:10:00 IST
  • மொட்டைச்சாமி தனது அண்ணனுடன் சொத்து தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டார்.
  • அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த மொட்டைச்சாமி எதுவும் நடக்காததது போல் வீட்டிற்கு சென்று விட்டார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி வைரவசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது58).

இவர் அதே பகுதியில் செருப்பு கடை வைத்து வியாபாரம்செய்து வந்தார். இவரது தம்பி மொட்டைச்சாமி (55). இவருக்கும், பொன்ராஜூக்கும் கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.

இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்றும் மொட்டைச்சாமி தனது அண்ணனுடன் சொத்து தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று காலை பொன்ராஜ் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்திற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மொட்டைச்சாமி குடிபோதையில் வந்தார். அவர் அண்ணன் பொன்ராஜூடன் தகராறு செய்தார். அப்போது அவர், தான் மறைத்து வைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பொன்ராஜின் வயிற்றில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த மொட்டைச்சாமி எதுவும் நடக்காததது போல் வீட்டிற்கு சென்று விட்டார்.

பொன்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள், அது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மொட்டைச்சாமியை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News