உள்ளூர் செய்திகள்

மறைமலைநகர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி

Published On 2022-08-08 11:25 GMT   |   Update On 2022-08-08 11:25 GMT
  • அண்ணன், தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் கருநிலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநிலம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் விவசாயி. இவரது மனைவி தேன்மொழி (வயது 29). இவர்களது மகன்கள் லோகேஷ் குமார் (8). 2-ம் வகுப்பு படித்து வந்தான். சித்தார்த் (4). எல்.கே.ஜி. படித்து வந்தான். இவர்கள் இருவரும் மறைமலைநகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேன்மொழி தனது மகன்கள் 2 பேரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு கருநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கருநிலம் கிராமம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற டிராக்டரை தேன்மொழி மொபட்டில் முந்தி செல்ல முயன்றார். அப்போது திடீரென எதிர்ப்புறமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் வந்த தேன்மொழி, லோகேஷ் குமார், சித்தார்த் ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது டிராக்டரில் இணைக்கப்பட்ட டிரெய்லரின் பின்புற சக்கரத்தில் 3 பேரும் சிக்கிக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் சித்தார்த் தனது தாய் கண் முன்பாக ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தான். பலத்த காயம் அடைந்த லோகேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தான்.பலத்த காயம் அடைந்த தேன்மொழி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணன், தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் கருநிலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News