உள்ளூர் செய்திகள்

ரூ.42 கோடி கடன்- தொழில் நஷ்டத்தால் ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து நூற்பாலை அதிபர் தற்கொலை

Published On 2023-09-26 10:01 GMT   |   Update On 2023-09-26 10:01 GMT
  • கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.
  • தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடவள்ளி:

கோவை விளாங்குறிச்சி, எஸ்.ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யா சங்கர் (வயது 44). தொழில் அதிபர்.

இவருக்கு திருமணம் ஆகி பிந்து என்ற மனைவியும், 15 வயதில் ராகவ் என்ற மகனும் உள்ளனர்.

வித்யா சங்கர் திருப்பூரில் சொந்தமாக நூல் தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். வித்யா சங்கர் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்காவும், தொழிலுக்காகவும், வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து கடன் வாங்கி இருந்தார். மொத்தமாக ரூ.42 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனுக்கு மாதம் தவறாமல் குறிப்பிட்ட நாட்களிலும் பணத்தையும் செலுத்தி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.

தினமும் போன் போட்டு தொந்தரவு செய்ததால் வித்யா சங்கர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து தனது காரில் கம்பெனிக்கு புறப்பட்டார்.

ஆனால் அவர் திருப்பூருக்கு செல்லாமல் நேராக தொண்டாமுத்தூர் குள்ளாகவுண்டன்புதூர் பகுதிக்கு சென்று தனது காரை நிறுத்தினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாலும் மன உளைச்சலில் இருந்த வித்யா சங்கர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

இதையடுத்து அவர், ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து வாங்கினார். பின்னர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இந்த நிலையில் காலையில் இருந்து மாலை வரை அந்த பகுதியிலேயே கார் நின்றதாலும், போன் அடித்தும் யாரும் எடுக்காததாலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் காருக்குள் ஏறி பார்த்த போது, அங்கு வித்யாசங்கர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து வித்யா சங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

போலீசார், வித்யா சங்கரின் காரில் இருந்த லேப்-டாப், டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, சோதனையிட்டனர். அப்போது டைரியில் வித்யா சங்கர் தான் யாரிடம் எல்லாம் இருந்து கடன் பெற்றுள்ளேன் என்பது குறித்தும், அந்த நபர்களின் பெயர்களையும் விரிவாக எழுதியிருந்தார்.

அந்த தகவல்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News