மதுரையில் முன் விரோதத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
- ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- கொலை தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து சோனைராஜை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாடக்குளம் தனத்துவம்புதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது20). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சோனைராஜ்(40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சோனைராஜ், ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி பிரச்சினை செய்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சோனைராஜ் தான் மறைத்து கொண்டுவந்திருந்த அரிவாளை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டினார்.
இதனை தடுக்க வந்த அவரது தந்தை அய்யனனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அய்யனனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கொலை தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து சோனைராஜை கைது செய்தனர்.