உள்ளூர் செய்திகள்

கொடைரோடு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2023-08-13 05:28 GMT   |   Update On 2023-08-13 05:28 GMT
  • லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

கொடைரோடு:

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ஜெகன்நாதன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்களுடன் காரில் மதுரை, திருச்செந்தூருக்கு ஆன்மீக சுற்றுலா வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சேலத்துக்கு காரில் புறப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி உருக்குலைந்தது. இந்த விபத்தில் ஜெகன்நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காருக்குள் சிக்கிக் கொண்ட அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் பயணம் செய்த சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (40), சங்கர் (29), மற்றொரு கார்த்திக் (31), முருகேசன் (30), கார் டிரைவர் மகேந்திரன் (39) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இரவு நேரத்தில் 4 வழிச்சாலை ஓரத்தில் உள்ள கடைகளுக்கு செல்வதற்காக லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News