கவரப்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளையடித்த 2 பேர் கைது
- கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.
- போலீசார் மதுக்கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை வழக்கம் போல் மூடிவிட்டு ஊழியர் சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு போலீசார் அவ்வழியே ரோந்து வந்தபோது டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டனர். மேலும் கடையில் உள்ளே ஆட்கள் நடமாட்டம் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் மதுக்கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிவந்தது.
இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு புகுந்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.14 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்தனர்.
ஆனால் மது பாட்டில்களை பார்த்ததும் மதுகுடிக்க ஆசைப்பட்ட அவர்கள்அங்கேயே சாவகாசமாக அமர்ந்து மது குடித்தனர். போதை ஏறியதால் தப்பி செல்வதை மறந்து அங்கேயே தொடர்ந்து மதுகுடித்தபடி இருந்து உள்ளனர்.
அந்த நேரத்தில் போலீசார் ரோந்து வந்த போது கொள்ளையர்கள் 2 பேரும் சிக்கிக் கொண்டனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.