பட்டுக்கோட்டை அருகே சோகம்- ரெயில் முன் பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை
- ரோஜா ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் ரோஜா ராஜசேகர் (வயது58). இவர் தனது கடையில் திருட்டு நகையை வாங்கி வந்ததாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார், பட்டுக்கோட்டை வந்து நகைக்கடையில் சோதனை நடத்தினர்.
பின்னர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி லெட்சுமி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் பொற்கொல்லர் சங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர் சங்கம் இணைந்து கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ரோஜா ராஜசேகர், தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் மனமுடைந்தார்.
நேற்று இரவு வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் ரோடு செட்டியக்காடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் முன் பாய்ந்து ரோஜா ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் சிதறியது.
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரோஜா ராஜசேகர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் ரோஜா ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.