உள்ளூர் செய்திகள்

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.5 கோடி மோசடி- 5 பெண்கள் உள்பட 8 பேர் கைது

Published On 2023-04-16 13:07 IST   |   Update On 2023-04-16 13:07:00 IST
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • ராம்குமாரிடம் 8 பேர் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

மதுரை:

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 41). இவர் அதே பகுதியில் தங்க நகை வளையல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் விளக்குத்தூண் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் நகை கடை நடத்தி வருகிறேன். என்னிடம் செல்லூர் பெரியார் தெருவை சேர்ந்த செல்லபாண்டியன் மனைவி தீபா (28), திருமலை கண்ணன் மனைவி தீபிகா (30), பாலகுரு மனைவி அன்னலட்சுமி (49), எல்லீஸ் நகர் ஜெயபிரபா, மாங்குளம் பாரதி நகர் காஞ்சிவனம் மனைவி துர்கா தேவி (39), சிலைமான் தங்க முனீஸ்வரன் (36), கருப்பாயூரணி கிருஷ்ணமூர்த்தி (36), விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மணிகண்டன் (35) ஆகிய 8 பேர் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கிச் சென்றனர்.

இதற்கான பணத்தை அவர்கள் தரவில்லை. நான் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, அவர்கள் திருப்பி தர மறுத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராம்குமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை கொடுத்தற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் ராம்குமாரிடம் 8 பேர் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 8 பேரையும் விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News