உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் மதுரை மாநகராட்சி ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2022-09-04 05:29 GMT   |   Update On 2022-09-04 05:29 GMT
  • திருமங்கலம் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் துப்பு துலக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • உடனடியாக சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை கைது செய்யவேண்டும். மேலும் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று சந்தேக நபர்களை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியான பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரபிதீன் முகமது ராஜா (வயது53). இவர் மதுரை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு. இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மகள்கள் கல்லூரிக்கு சென்று விட்டனர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் தங்க நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம், செல்போன், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மாலையில் வீடு திரும்பிய ரபிதீன் முகமது ராஜா வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் திருமங்கலம் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை-பணம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திருமங்கலம் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் துப்பு துலக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை கைது செய்யவேண்டும். மேலும் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று சந்தேக நபர்களை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News