தூத்துக்குடியில் பெண்னை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவர் கைது
- முத்துமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
- முத்துமாரியின் உடலில் பல்வேறு இடங்ளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள நேருஜிநகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது37). கூலி தொழிலாளி.
இவருக்கும் தாளமுத்துநகரை சேர்ந்த முத்துமாரி (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் முத்துமாரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
அப்போது முத்துமாரி தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் முதற்கட்டமாக தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர். எனினும் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே முத்துமாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் முத்துமாரியின் உடலில் பல்வேறு இடங்ளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கருப்பசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முத்துமாரியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவர் ஏன்? முத்துமாரியை கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகிறார்.