ஓசூரில் போலீசார் மீது பெட்ரோல் ஊற்ற முயன்ற எலக்ட்ரீசியன் கைது
- போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
- சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஓசூரில் உள்ள பஸ்டி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்றார்.
அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் போலீசாரை ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் பாகலூர் கே.கே.நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வடிவேல் (வயது35) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.