திருப்பூரில் நூதன முறையில் கஞ்சா சாக்லேட் விற்பனை- வடமாநில வாலிபர்கள் 2பேர் கைது
- போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வடமாநிலங்களில் இருந்து டப்பாக்களில் அடைத்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தல்.
- கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்தி நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான விடுதி அருகே வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா மற்றும் போதை சாக்லெட் விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் பிரதான் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ¼ கிலோ கஞ்சா, 16 டப்பா போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வடமாநிலங்களில் இருந்து டப்பாக்களில் அடைத்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல் அவினாசி போலீசார் பழங்கரை பஸ் நிலையம் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரேம் சிங் ரின்வா (வயது 21) என்பவரை கைது செய்தனர்.