உள்ளூர் செய்திகள்

மதுரையில் கொடூர சம்பவம்: பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

Published On 2022-11-25 11:50 GMT   |   Update On 2022-11-25 11:50 GMT
  • மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது.
  • பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனையின்பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அந்த சிறுமி கூறுகையில், நான் ஜெய்ஹிந்த்புரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை பெயிண்டராக உள்ளார். அவர் எனக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். நான் உயிருக்கு பயந்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன். அவரது தொல்லை சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. வேறு வழியின்றி தாயாரிடம் விஷயத்தை தெரிவித்தேன் என்றார்.

இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News