உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் பிளம்பர் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2023-09-30 23:45 IST   |   Update On 2023-09-30 23:45:00 IST
  • குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு ரங்கம்பாளையம் ரெயில் நகரை சேர்ந்தவர் யுவராஜ் (38). பிளம்பர். குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 28-ந் தேதி யுவராஜ் தனது குடும்பத்தினருடன் ஆர்.என்.புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு இன்று காலை 5 மணி அளவில் யுவராஜ் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து 4½ பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ. 20 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும் தடையங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நம்பர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News