எரியோடு அருகே சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வாலிபர் கைது
- வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
- எரியோடு போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள புங்கம்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது மாமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி தனது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனை கூலி வேலைக்கு சென்று வளர்த்து வந்துள்ளார். தினமும் அவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அந்த சமயங்களில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் குழந்தைகளை அடித்து வேலை வாங்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். சிறுவன் அழுதபோது வாயில் துணியை வைத்து அழுத்தி இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லகூடாது என மிரட்டி வந்துள்ளார். மணிகண்டனின் தொல்லை நாளுக்குநாள் அதிகரிக்கவே குழந்தைகளின் தாய் இதுகுறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் சிறுவன் சூடுபட்டு கதறி அழுத வீடியோ சமூகவலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எரியோடு போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.