உள்ளூர் செய்திகள்

விளாத்திகுளம் அருகே ஒர்க்‌ஷாப்பில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலி

Published On 2022-09-15 07:36 GMT   |   Update On 2022-09-15 07:36 GMT
  • உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
  • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பால்ராஜ் (வயது 24).

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் நித்யா டிக்கரிங் வெல்டிங் வெர்க்ஸ் எனும் பெயரில் சொந்தமாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

இவருடைய ஒர்க்‌ஷாப்பில், பகுதி நேர பணியாளராக பணிபுரிந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணமகாராஜன் என்பவரின் மகன் குருமூர்த்தி (15). என்ற 9-ம் வகுப்பு பயின்று வந்த சிறுவன், வழக்கம்போல இன்றும் தனது வேலையை முடித்துவிட்டு இரவில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக மின்சார சுவிட்ச் பெட்டியை காலால் மிதித்ததில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனைக் கண்ட கடையின் உரிமையாளர் பால்ராஜ் குருமூர்த்தியை காப்பாற்ற மின் ஒயரை இழுத்தார். அப்போது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் கையில் ரத்த காயம் ஏற்பட்டது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் மின்சார விபத்து குறித்து வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் பால்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News