உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த சிசுவைக் கொன்று கழிவறையில் வீசிய கொடூரம்

Published On 2023-05-22 11:47 IST   |   Update On 2023-05-22 11:47:00 IST
  • கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது.
  • கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய கட்டிடத்தில் தலைமை மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இதில் 20 படுக்கைகள் கொண்டு சிகிச்சை பிரிவு உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த பிரிவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 24 மணிநேரமும் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்குள்ள கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது. கழிவறையை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு பணியாளர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ஆண் சிசு உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் சிசுவை கொன்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவறான தொடர்பில் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்து கழிவறையில் வீசிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இறந்த சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News