உள்ளூர் செய்திகள்

நம்பியூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2022-11-04 05:25 GMT   |   Update On 2022-11-04 05:25 GMT
  • கல்லூரி முடிந்து திரும்பிய மதியரசு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தங்கை லாவண்யா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த லாவண்யாவை கீழே இறக்கினார். பின்னர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு மதியரசு (20) என்ற மகனும், லாவண்யா (17) என்ற மகளும் உள்ளனர். செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதியரசு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியிலும், லாவண்யா பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

லாவண்யா கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தாமதமாக கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு முதலாவது ஆண்டு தேர்வு தொடங்கியதால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மதியரசு கல்லூரிக்கு சென்று விட்டார். தாய் செல்வி அருகில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லாவண்யா வீட்டில் உள் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி முடிந்து திரும்பிய மதியரசு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தங்கை லாவண்யா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த லாவண்யாவை கீழே இறக்கினார். பின்னர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News