உள்ளூர் செய்திகள்

அரசு எப்போதும் துணையாக இருக்கும்- நாங்குநேரி மாணவனின் தாயாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2023-08-12 12:24 IST   |   Update On 2023-08-12 12:24:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
  • தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

நெல்லை:

நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை சபாநாயகர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக அரசு உங்களது குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அமைச்சரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளேன். நீங்கள் தைரியமாக இருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

நாங்குநேரியில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்த உடன் முதலமைச்சர் என்னை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

முதலமைச்சரும் நேரடியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயிடம் பேசியிருக்கிறார். குழந்தைகள் கல்வி தடைபடாத அளவில் நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை நிற்கும் எனவும் அவர்களிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேவையான உயர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர் அவர் கூறினார்.

Tags:    

Similar News