உள்ளூர் செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்புகள் தானம்: மருத்துவர்கள்- உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

Published On 2023-11-05 10:01 GMT   |   Update On 2023-11-05 10:01 GMT
  • பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆசிரியை மஞ்சுளாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
  • இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

பெருந்துறை:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குச்சிபாளையம் அடுத்த வெள்ளக்கல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆசிரியை மஞ்சுளா தனது மொபட்டில் குச்சி பாளையத்தில் இருந்து கோவிந்தம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் மஞ்சுளாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு ஆசிரியை மஞ்சுளா மூளை சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மஞ்சுளாவின் உடல் பாகங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பதாக விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. அவரது இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

இதையடுத்து அவரது உடலுக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி, பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், ஆசிரியரின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆசிரியை மஞ்சுளாவின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News