அரச்சலூர் அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
- ஜீவா குடிபோதையில் ஊரில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து தந்தை மற்றும் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தார்
- அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நாதக்காடையூர் கொமரபாளையம் கொல்லன் வலசு காலனி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ஜீவா (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜீவா கோவில் திருவிழாவில் டிரம் செட் அடிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜீவா அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் ஜீவா குடிபோதையில் ஊரில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து தந்தை மற்றும் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜீவா கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவாவின் தந்தை மற்றும் அவரது அண்ணன் கிணற்றுக்குள் இறங்கி ஜீவாவை மீட்க முயன்றனர். அதற்குள் ஜீவா தண்ணீரில் மூழ்கி பலியானார்.
பின்னர் இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.