உள்ளூர் செய்திகள்

முன்னாள் ராணுவ வீரரின் வீடு சூறை- ஆந்திர கிராம மக்கள் வெறிச்செயல்

Published On 2024-02-12 08:36 GMT   |   Update On 2024-02-12 08:36 GMT
  • வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.
  • ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

மேல்பட்டி:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமம் தாசராபள்ளி கொல்லை மேடுவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), முன்னாள் ராணுவ வீரர்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி தேன்மொழி, 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

வெங்கடேசன் தனது வீட்டின் அருகேயுள்ள, தனக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார்.

இவர்களின் விவசாய நிலம் ஆந்திர மாநிலம் தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை ஒட்டி உள்ளது.

அந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தமிழக எல்லையில் உள்ள பரதராமிக்கு, வெங்கடேசன் நிலத்தின் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலாம்பள்ளியை சேர்ந்தவர்கள், வெங்கடேசனின் நிலத்தின் வழியாக அத்துமீறி சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.


இது சம்பந்தமாக வெங்கடேசன் மற்றும் எதிர் தரப்பினரை பரதராமி போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி வேலி அமைத்தார். இதனால் ஆந்திரா மாநில கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

இதனால் ஆத்திரமடைந்த தண்டலாம்பள்ளி மற்றும் பாவதேசவூர் கிராமத்தை சேர்ந்த சிலர், வெங்கடேசன் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் நொருங்கி போனது.

இது குறித்து தகவல் அறிந்த பரதராமி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் வெங்கடேசன் தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர் வீட்டை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News