சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பஸ் பின்புறத்தில் கார் மோதி நிற்கும் காட்சி.
காவேரிப்பட்டணத்தில் தனியார் பள்ளி பஸ் மீது கார் மோதி முதியவர் உள்பட 2 பேர் பலி
- சாலையோரம் நிறுத்தி இருந்த தனியார் பள்ளி பஸ் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.
காவேரிப்பட்டணம்:
சேலம் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் ஐசக் (வயது65), எமரால்டு (40), ஜேசிசன்ஸ், பேரியல், கேப்ரியன் ஆகிய 5 பேரும் இன்று காலை காரில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 7.30 மணி அளவில் வந்த போது சாலையோரம் நிறுத்தி இருந்த தனியார் பள்ளி பஸ் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் ஐசக் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்தில் பலியான ஜெபராஜ் ஐசக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எமரால்டு (40) பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.