புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் 90 சதவீதம் தண்ணீர்
- ஏரிகள் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
- சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
தற்போது ஏரியில் 7810 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 66 சதவீதம் ஆகும். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 595 கன அடி தண்ணீர் வருகிறது.
கிருஷ்ணா நீர்வரத்தை கருத்தில் கொண்டும், பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கவும் பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இதனால் தற்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு 90 சதவீதம் உள்ளது. இதனால் ஏரிகள் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாலும், கிருஷ்ணா நீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதாலும் இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி. கன அடி. அதில் 3058 மி. கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.6 சதவீதம் ஆகும். ஏரிக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கன அடி இதில் 3276 மி. கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 90 சதவீதம் ஆகும்.
ஏரிக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 206 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சோழவரம் ஏரியில் தற்போது தண்ணீர் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கன அடி. இதில் வெறும் 131 மி. கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி. கன அடி. இதில் 924 மி. கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் 595 கன அடி வருகிறது. 821 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.