உள்ளூர் செய்திகள்

சித்தோடு அருகே பலத்த மழையால் 40 அடி மதில் சுவர் இடிந்து விழுந்து 8 கார்கள் சேதம்

Published On 2023-09-01 10:11 GMT   |   Update On 2023-09-01 10:11 GMT
  • இரவு நேரம் என்பதால் ஆட்கள் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
  • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவர் அதே பகுதியில் கார் பழுது நீக்கும் மையத்தை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 40-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இவரது கார் பழுது நீக்கும் மையத்தின் பின்பகுதியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. திருமண மண்டபத்தின் பின்பகுதியில் 40 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டப்பட்டு திருமண மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக 40 அடி மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைவேல் கார் பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 கார்கள் மீது மதில் சுவர் விழுந்ததில் கார்கள் முற்றிலுமாக நசுங்கி சேதமடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் ஆட்கள் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கார்கள் சேதம் அடைந்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News