தாம்பரம் அருகே பழிக்கு பழியாக 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை
- இரட்டை கொலை மணிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வழிப்பறி சம்பவங்களிலும் தேவேந்திரன் ஈடுபட்டு வந்தான்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா என்கிற தேவேந்திரன். இவன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 4 பேருடன் கஞ்சா புகைப்பது வழக்கம். மேலும் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தான்.
மேலும் வழிப்பறி சம்பவங்களிலும் தேவேந்திரன் ஈடுபட்டு வந்தான். மணிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் செல்பவர்களிடம் நகை, பணம், செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தான்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி தேவேந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்றான். அதன்பிறகு இரவில் அவன் வீடு திரும்பவில்லை. அவனை தந்தை பஞ்சாட்சரம் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தனது மகனை காணவில்லை என்று அவர் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவேந்திரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தின் அருகே புதிதாக கட்டப் பட்டு வரும் கட்டிடத்தின் மேல்தளத்தில் தேவேந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தேவேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேவேந்திரன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தேவேந்திரன் கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து மணிமங்கலம் பகுதியில் விற்பனை செய்து வந்தான். இதில் ஏற்பட்ட மோதலில் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து தேவேந்திரனை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தேவேந்திரனை கொலை செய்ததாக மணிமங்கலத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (23), சுகன் என்கிற சுரேந்தர் (20), புளி மூட்டை என்கிற சதீஷ் (20), சுதாகர் (21), ரைசுப் இஸ்லாமுல் அன்சாரி (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் விக்னேஷ், சுரேந்தர் ஆகியோர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் மணிமங்கலம் பகுதியில் சுற்றித்திருந்தனர்.
நேற்று இரவு விக்னேஷ், சுரேந்தர் இருவரும் மணிமங்கலம் போலீஸ் நிலையம் அருகே தேவேந்திரன் கொலை செய்யப்பட்ட இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 12 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை வழி மறித்தனர்.
இதையடுத்து விக்னேஷ், சுரேந்தர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர்களது தலை, உடல் பகுதியில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுபற்றி பொது மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
உயிருக்கு போராடிய விக்னேஷ், சுரேந்தர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தேவேந்திரன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவரது கூட்டாளிகள் விக்னேசையும், சுரேந்தரையும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் வகையில் நடந்த இந்த இரட்டை கொலை மணிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.