உள்ளூர் செய்திகள்

தொடர் கொலை சம்பவங்கள் எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் 19 ரவுடிகள் கைது

Published On 2023-08-14 07:15 GMT   |   Update On 2023-08-14 07:15 GMT
  • ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
  • ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கொலைகள் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் 'ஸ்ட்ராமிங் ஆபரேஷன்' செய்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் பழைய குற்றவாளிகள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் என பல்வேறு வகைகளில் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். இதில் இன்று ஒரே நாளில் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று மாலைக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News