உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் பீடி மண்டி அதிபர் வீட்டில் 11 பவுன் நகை ரூ.3.90 லட்சம் கொள்ளை

Published On 2023-05-23 07:25 GMT   |   Update On 2023-05-23 07:25 GMT
  • வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகைகள், ரூ.3.90 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

வேலூர்:

காட்பாடி அடுத்த சேனூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டெல்லி. இவர் பீடி மண்டி நடத்தி வருகிறார். இவரது மனைவி கவுரி.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஜாப்ராபேட்டையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகைகள், ரூ.3.90 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கவுரி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையின் போது இதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கவுரியின் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்ததாக தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அவர் நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மாணவரின் வீட்டு மாட்டு கொட்டகையில் பையில் பதுக்கி வைத்திருந்த நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

Similar News