உள்ளூர் செய்திகள்

ஈஷாவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு - பலவகை பழங்களை தேவிக்கு அர்ப்பணித்த கிராம மக்கள்

Published On 2023-04-14 17:13 GMT   |   Update On 2023-04-14 17:13 GMT
  • ஈஷாவில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
  • அங்குள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பலவகை பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர்.

கோவை:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.

சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்திப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கவேண்டும் என கடந்த மகாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார். அதன் ஒருபகுதியாக, ஆதியோகி முன் தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதி யோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாகப் பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

Tags:    

Similar News