உள்ளூர் செய்திகள்

கடந்த 2008-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கீழக்குறிச்சி நடுநிலைப் பள்ளியை படத்தில் காணலாம்.

கீழக்குறிச்சி உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறை, கழிவறை அமைக்க மாணவ-மாணவிகள் கோரிக்கை

Published On 2023-02-05 08:26 GMT   |   Update On 2023-02-05 08:26 GMT
  • நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
  • அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம், வேப்பூா் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த நடுநிலை பள்ளியில் சுமார் 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 2008-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. அதன்படி நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். உயர்நிலை பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால் மழை, வெய்யில் காலங்களில் நடுநிலை பள்ளி வளாகத்தில் 9,10-ம் வகுப்பு மாணவர்களும் பயின்று வருகின்றனர். மேலும், இந்த பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த நிதியை பயன்படுத்தி கட்டிடம் மற்றும் வசதிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம், கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் கிராம சபை கூட்டத்தின் வாயிலாகவும், பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் எங்கள் பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் கிராம மக்களோடு ஒன்றிணைந்து சாலைமறியலில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News