உள்ளூர் செய்திகள்

அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆக்கம் மற்றும் நலம் என்னும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பள்ளி புதுப்பித்தல் பணியினை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி ஆகியோர் உள்ளனர்.

நரிக்குறவர் இன மாணவர்கள் உயர்கல்வி பயின்றுஉயர்ந்த பதவியில் அமர வேண்டும்

Published On 2023-06-22 07:51 GMT   |   Update On 2023-06-22 07:51 GMT
  • 133 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • ஆக்கம் மற்றும் நலம் என்னும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பள்ளி புதுப்பித்தல் பணியினை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசால் நரிக்குறவர், குருவிக்காரன் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 133 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் மற்றும் 10 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

அரசால் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து தற்பொழுது பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர்களுக்கு சாதிச்சான்று வழங்குவதால் ஏராளமான சலுகைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்களுக்கென அரசுப்பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நரிக்குறவர் இன மாணவ, மாணவியர்கள் அனைவரும் உயர்கல்வி பயின்று போட்டித்தேர்வுகளில் பங்கேற்று, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் தங்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எளிதாக அரசுப்பணியில் சேரலாம். எனவே, அனைத்து மாணவ, மாணவியர்களும் அரசின் இடஒதுக்கீட்டினை முறையாக பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வி பயின்று, அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் அமர வேண்டும்.

மேலும் தருமபுரி, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை வட்டாட்சியர்களும் தங்களது வட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரன், நரிக்குறவர் நரிக்குறவன் சாதிச்சான்று அட்டையாக பெறப்பட்டிருப்பின் அதை ரத்து செய்து இ-சாதிச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆக்கம் மற்றும் நலம் என்னும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பள்ளி புதுப்பித்தல் பணியினை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்ட அலுவலர் வில்சன் ராஜசேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News