சங்கராபுரம் அருகே பள்ளி வளாகத்தில் .கோவில் கட்டுவதை தடுக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொழுவந்தாங்கலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம்போல் சென்றனர் .அப்போது பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக கோவில் கட்டி வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனே தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கோவில் கட்டினால் இட நெருக்கடி ஏற்படும். மேலும் கோவிலில் விழா நடக்கும் சமயத்தில் எங்களின் கல்வி பாதிக்கப்படும்.
எனவே பள்ளி வளாகத்தில் கோவில் கட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அங்குள்ள கடுவனூர்-அத்தியூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த வட பொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமை யிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.