உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே மாணவி கொடூரக் கொலை

Published On 2022-06-11 07:18 GMT   |   Update On 2022-06-11 07:18 GMT
ஆத்தூர் அருகே மாணவி கொடூரக் கொலை: கைதான கல்லூரி மாணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ரோஜா(வயது19). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சாமிதுரை. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சாமிதுரை கூடமலையில் உள்ள பெரியப்பா சின்னதுரை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவை காதலித்து வந்தார். ஆனால் ரோஜா விலகிச் சென்றதாக கூறப்படுகிறது .இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டிற்கு சென்று அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 3 நாட்களுக்கு பிறகு மலையிலிருந்து இறங்கிய சாமிதுரையை அந்த பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

இதை தொடர்ந்து போலீசார் சாமிதுரையை கைது செய்தனர். கைதான சாமிதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவும் நானும் காதலித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ரோஜா என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். என்னை பார்ப்பதையும் தவிர்த்தார். 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்ல வீட்டின் முன்பு நின்றிருந்த ரோஜாவுடன் பேசினேன் .ஆனால் ரோஜா என்னிடம் பேசாமல் தவிர்த்தார்.

இதனால் மனமுடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன், அதன்படி கடந்த 6 -ந்தேதி சென்னையில் இருந்து ஆத்தூருக்கு வந்த நான் டீசல் வாங்கி கொண்டு ரோஜா வீட்டிற்கு சென்றேன், அங்கு அவளை தீ வைத்து எரித்து விட்டு நானும் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஆனால் மண் எண்ணையை அவரது உடலில் ஊற்றிய நிலையில் அவர் சகதியில் உருண்டு புரண்டதால் அவர் மீது தீ பிடிக்க வில்லை . மேலும் அவரது சகோதரி நந்தினியும் அவரை தீ வைத்து எரிக்க விடாமல் தடுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தேன்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நான் தொடர்ந்து 3 நாட்களாக மலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது சோளக்கதிர், மாங்காய், குச்சிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வந்தேன். தண்ணீர் குடிக்க வந்த போது பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார் . தொடர்ந்து அவரை போலீசார்ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News