மேலப்பாளையம் - டவுன் இடையே நத்தம் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் - கலெக்டரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
- பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
- பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அயூப் தலைமையில் நிர்வாகிகள் மைதீன், சித்திக், சம்சுதீன், செய்யது முகம்மது சேட் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தரைப்பாலம்
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் சாலையில் நத்தம் தாமிரபரணி தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் இந்த பாலம் சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
கோரிக்கை
இந்த பாலத்தில் ஏராளமான பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது. இதனால் இரவு நேரங்களிலோ, வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்பட்டாலோ ஆற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக இந்த பாலத்தின் தரைப்பகுதியை சீரமைத்து பாலத்தின் இருபுறமும் முழுமையாக தடுப்புச்சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய பாலம் அமைத்திட திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.