உள்ளூர் செய்திகள்

இணையதள குளறுபடியால் 5 மாதம் சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதி

Published On 2022-11-09 13:31 IST   |   Update On 2022-11-09 13:31:00 IST
  • இணையதள குளறுபடியால் 5 மாதம் சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.
  • கல்லல் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் இணைய தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.

சிவகங்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:-

தமிழக அரசு காகித பயன்பாட்டை தவிர்க்கவும், விரைவான சேவை வழங்கும் நோக்கத்திலும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்திட்டம் இணையதளம் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை நிறுவிய தனியார் நிறுவனம் அடிப்படை ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கவில்லை. இதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்பொழுது அதை சரிசெய்ய அலுவலக பணியாளர்களால் இயலவில்லை.

இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ராஜேஸ்வரி,என்.மேலையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியர் விவிலி ஆகிய இருவருக்கும் கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

2 பள்ளிகளிலும் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சிவகங்கை ஒன்றியத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

இதனால் கல்லல் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் இணைய தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்று வந்த ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக ரீதியில் அதிகாரிகளால் ஏற்பட்ட குளறுபடிக்கு எவ்வித காரணமும் இல்லாத ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது சராசரி குடும்ப வாழ்க்கை மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கருவூலக அலுவலர்களிடம் முறையிட்டதற்கு சென்னை இயக்குநர் அலுவலகம்தான் சரி செய்து தரவேண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்கள்.

இந்த நிலையே கடந்த 5 மாதமாக தொடருவதால் இந்த குளறுபடியை சரிசெய்து உடனடியாக ஊதியம் வழங்க வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குனரிடம் நேரடியாக முறையிட்டுள்ளோம். பல லட்சம் செலவழித்து உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் குறித்து முழுமையான பயிற்சியை அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் வழங்கி ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உரிய தேதியில் வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News