உள்ளூர் செய்திகள்

சித்தர் முத்துவடுககேசர்

சித்தர் முத்துவடுககேசர் குருபூஜை

Published On 2022-07-25 07:10 GMT   |   Update On 2022-07-25 07:10 GMT
  • சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் 190-வது குருபூஜை விழா நடந்தது.
  • இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் ஜீவ சமாதி உள்ளது. நல்லாகுளம் வடகரையில் அமைந்துள்ள அவருடைய ஜீவ சமாதி பீடத்தில் சித்தர் சிவந்தி லிங்க சுவாமி ஏகமயார் வம்சாவளியினர் பரம்பரை பூசாரிகள் மற்றும் சித்தர் வாரிசுதாரர்கள்

190-வது குருபூஜை விழாவை நேற்று நடத்தினர்.இதையொட்டி சித்தர் முத்துவடுகேசர் சிலைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்த சித்தர் முத்துவடுககேசருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் சிறப்பாக அன்னதானம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அன்னதானத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குருபூஜை ஏற்பாடுகளை பரம்பரை பூசாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News