கிராண்ட் மாஸ்டரான பிரனேசுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு
- கிராண்ட் மாஸ்டரான பிரனேசுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 17). இவர் புதுவயல் வித்யாகிரி மெட்ரிகுலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் சுவீடனில் நடந்த உலக செஸ் போட்டியில் பங்கேற்று 9 க்கு 8 புள்ளி பெற்று இந்தியாவின் 79 மற்றும் தமிழகத்தின் 28-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று முதல் முறையாக காரைக்குடிக்கு வந்த மாணவன் பிரனேசுக்கு காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் வித்யாகிரி பள்ளி தலைவர் நருவிழி கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
சக மாணவர்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.