கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை-பேச்சுப்போட்டி
- சிவகங்கை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை-பேச்சுப்போட்டி நடக்கிறது.
- ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு இப்போட்டிகள் வருகிற 10-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடை பெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மட் டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்பு கள் போட்டிகள் தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.