பள்ளி வாகனங்களை கவனத்தோடு இயக்க அறிவுறுத்தல்
- பள்ளி வாகனங்களை கவனத்தோடு இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 388 பள்ளி வாகனங்கள் உள்ளன. அதில் இன்றைய தினம் 298 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனத்தின் டிரைவர்கள் அதனை இயக்குவதற்கு முன்பு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.
ஓட்டுனர்கள் வாகனத்தை கவனத்துடனும், அனுமதிக் கப்பட்ட வேகத்துடன் மட்டுமே இயக்க வேண்டும். வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைப்பேசி பயன்படுத்துதல் போன்ற செயல்முறைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு குழந்தைகளை மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநகர் கலந்து கொண்டனர்.