செங்காத்தாகுளம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள்-ரொக்க பணம் கொள்ளை
- வீட்டின் உரிமையாளர் அனுசுயா மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
- கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியை சேர்ந்த செங்காத்தாகுளம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் அனுசுயா(வயது70) ஆவார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த வாரம் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அனுசுயாவின் வீட்டை அவரது உறவினர்கள் பார்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை மூதாட்டி அனுசுயாவின் வீட்டிற்கு அவரது உறவினர் வந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த சுமார் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும்,வீட்டில் வைத்திருந்த ரூ.10,௦௦௦ ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மேலும், அனுசுயாவுக்கும் தகவல் கூறினர்.சென்னையில் இருந்து அனுசுயா வந்து பொருட்களை சரி பார்த்தால்தான், தங்க நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்பட்டதா? என்ற விபரம் தெரியவரும். இந்தக் கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.