கோவையில் சி.சி.டி.வி காமிராவை உடைத்து கடையில் திருட்டு
- ரங்கம்மாள் கோவில் வீதியில் மோட்டார் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
- லேப்டாப், 2 செல்போன்கள், ரூ. 4 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றனர்.
கோவை:
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 33). இவர் பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியில் மோட்டார் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ரமேஷ்குமாரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அவர் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த ஒரு லேப்டாப், 2 செல்போன்கள், ரூ. 4 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மர்ம நபர் தனது அடையாளம் தெரியாமல் இருக்க கடையில் இருந்த சி.சி.டி.வி காமிராவை உடைத்து சென்றார்.
இது குறித்து ரமேஷ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன்களை திருடி சென்றது அம்மன்குளம் ஏரிமேட்டை சேர்ந்த முருகன் (எ) குண்டு முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.