திண்டுக்கல்லில் உள்ள ரேசன் கடையில் இன்று தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று 10 ரேசன் கடைகளில் மட்டும் ரூ.60க்கு தக்காளி விற்பனை
- 10 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. 1 கடைக்கு 50 கிலோ வீதம் ஒரு கார்டுக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டது.
- 10 கடைகளுக்கு மட்டுமே தக்காளி வந்துள்ளதாகவும், மற்ற கடைகளுக்கு பின்னர் வரும் என்றும் அது எப்போது என்று தெரியாது என விற்பனையாளரட்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டிலும், உழவர் சந்தையிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு மேல் விற்கப்பட்டதால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி இருந்தனர்.
தக்காளியைத் தொடர்ந்து வெங்காயம் கிலோ ரூ.170க்கு திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனையானது. இதே போல் இஞ்சி ரூ.300, என்ற விலையிலும் அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளும் ரூ.80க்கு மேல் விற்பனையானது. இதனால் சாமானிய மற்றும் ஏழை மக்கள் காய்கறிகளை வாங்கி சமைத்து உண்ண முடியாத நிலையில் இருந்தனர்.
குறிப்பாக அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை போக்க தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.
ஆனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுேம ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனையாகவில்லை. திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று ரூ.120க்கு தக்காளி விற்பனையானது. வெளிக்கடைகளில் ரூ.130 மற்றும் அதற்கு மேல் விற்கப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, லயன்தெரு, ராமநாதபுரம், தொந்தியாபிள்ளை சந்து, உள்ளிட்ட 10 கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. 1 கடைக்கு 50 கிலோ வீதம் ஒரு கார்டுக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டது. அனைத்து கடைகளிலும் தக்காளி சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது.
இதனிடையே ரேசன் கடையில் தக்காளி விற்பனையாவது குறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாலானோர் தங்கள் கார்டுக்கு தக்காளி வாங்கலாம் என்று ஆவலாக சென்றனர். ஆனால் 10 கடைகளுக்கு மட்டுமே தக்காளி வந்துள்ளதாகவும், மற்ற கடைகளுக்கு பின்னர் வரும் என்றும் அது எப்போது என்று தெரியாது என விற்பனையாளரட்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
சுழற்சி முறையில் அனைத்து கடைகளுக்கும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.