செய்யூர் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கினார்
- சவிதா அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சுபா உள்ளிட்ட 10 பேருடன் துறையூரில் இருந்து ஆட்டோ மூலம் கடப்பாக்கம் குப்பம் கடற்கரைக்கு வந்தார்.
- ராட்சத அலை மாணவி சவிதாவை கடலுக்குள் இழுத்து சென்றது.
மதுராந்தகம்:
செய்யூர் அருகே உள்ள துறையூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவரது மகள் சவிதா (வயது13). ஆண்டார்குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சவிதா அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சுபா உள்ளிட்ட 10 பேருடன் துறையூரில் இருந்து ஆட்டோ மூலம் கடப்பாக்கம் குப்பம் கடற்கரைக்கு வந்தார்.
பின்னர் அவர்கள் அனைவரும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத அலை மாணவி சவிதாவை கடலுக்குள் இழுத்து சென்றது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சவிதாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி மாயமானார். அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.
இதுகுறித்து சூனாம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மூழ்கி மாயமான மாணவி சவிதாவை அப்பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியுடன் தேடி வருகிறார்கள்.