சங்கரன்கோவிலில் வாகனம் மோதி ரெயில்வே கேட் சேதம்
- சங்கரன்கோவிலில் வாகனம் மோதியதில் ரெயில்வே கேட் சேதம் அடைந்தது.
- சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ரெயில் நிலையம் அருகே புளியங்குடி சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கிராசிங்கில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் ஒருபுறத்தில் இருந்த ரெயில்வே கேட் சேதமடைந்தது. இன்று காலை 8 மணிக்குள் 4 ரெயில்கள் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தை கடக்கும் சூழ்நிலை இருந்ததால், ரெயில்வே பணியாளர்கள் மற்றும் ெரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்து செயின்களை வைத்து தடுப்பு அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ரெயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்வே கேட்டை சேதப்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பயணிகள் ரெயில் மற்றும் தாம்பரம் முதல் நெல்லை வரை செல்லும் அதிவிரைவு ரெயில் ஆகிய 2 ரெயில்களும் ஒரே நேரத்தில் வந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே கேட் சேதமான நிலையில் செயின் மூலமாக வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.