உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2023-07-23 07:12 GMT   |   Update On 2023-07-23 07:12 GMT
  • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது திடீரென ஒரு வாகனம் அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
  • இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

சேலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அத்திபாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் சேலத்திற்கு வந்தார்.

வாகனம் மோதி பலி

நள்ளிரவு 2 மணி அளவில் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது திடீரென ஒரு வாகனம் அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அம்மா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் ரமேஷின் உறவினர்கள் கிருஷ்ணகிரி யில் இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பலியான ரமேஷ் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

சி.சி.டி.வி. காமிராவில் ஆய்வு

இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் விபத்து நடந்த காட்சி பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News