உள்ளூர் செய்திகள்

டிப்பர் லாரி மீது பிக்அப் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2023-05-31 09:36 GMT   |   Update On 2023-05-31 09:36 GMT
  • ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
  • கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார்.

கருப்பூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர், சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42), டிரைவர். இவர், ஓமலூரில் இருந்து ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

இந்த செங்கல் பாரத்தின் மீது கூலி தொழிலாளிகளான ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (31), மாட்டுக்காரன் புதூரை சேர்ந்த மதியழகன் (22) ஆகிய அமர்ந்து சென்றனர்.

கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் முருகேசன் பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பிக்அப் வாகனம், டிப்பர் லாரி மீது மோதியது. இதில் செங்கல் மீது அமர்ந்திருந்த ராஜா, மதியழகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதியழகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் சாலையின் குறுக்கே சென்ற லட்சுமியும் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News