உள்ளூர் செய்திகள்

சேலம் கோட்டத்தில் வார இறுதிநாள், அமாவாசையை முன்னிட்டுகூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-10-12 15:11 IST   |   Update On 2023-10-12 15:11:00 IST
  • சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
  • அமாவாசையை முன்னிட்டு பல்வேறு வழித் தடங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

150 சிறப்பு பஸ்கள்

இந்த நிலையில் வார இறுதி நாளான நாளை மறுநாள் (14-ந்தேதி) மற்றும் அமாவாசையை முன்னிட்டு பல்வேறு வழித் தடங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

மேலும் முன்பதிவு பஸ்கள் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

சித்தர்கோவில்

அமாவாசையை முன்னிட்டு சேலம் நகர பஸ் நிலையத்தில் இருந்து சித்தர்கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் மற்றும் தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாதேஷ்வரன்மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News